இலங்கை விமானப்படையினருக்கு பயிற்சி விவகாரம்! முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை விமானப் படை வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த முதல்வர் ஜெயலலிதா தேவையில்லாமல் என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
தமிழினத் தலைவர் என்று எனக்கு நானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது, இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வான்படை வீரர்கள் சிலர் தாம்பரத்தில் பயிற்சி பெறுகிறார்கள் என்று செய்தி கேள்விப்பட்டதும், தலைமைச் செயலாளரை அழைத்து உடனடியாக மத்திய அரசின் பாதுகாப்புத் துறையிடம் தொடர்புகொண்டு அவர்களைத் திருப்பி அனுப்ப கேட்டுக் கொண்டேன்.
மத்திய அரசும் தமிழகத்தில் இருந்து அவர்களைத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.
வேறு மாநிலத்தில் பயிற்சி: இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்காமல் வேறு மாநிலத்தில் பயிற்சி அளித்தால் என்ன செய்வது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படிப் பயிற்சி அளிக்க முன் வந்தால் அப்போது பார்ப்போம் என்று சொன்னேன். அதன் பிறகுதான் பயிற்சி பெற வந்தவர்களை மத்திய அரசு கர்நாடகத்துக்கு அனுப்பியதாக செய்தி வந்தது.
இந்தச் செய்தி வந்தவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.
இதுதொடர்பாக செய்தியாளர்களும் என்னிடம் கேள்வி கேட்காததால், அதைச் சொல்லவில்லை.
இதனால் எனக்குத் தமிழ் உணர்வே இல்லை என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
எனக்கு தமிழ் உணர்வு இருக்கிறதா, இல்லையா என்று முடிவு செய்திட இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் சான்றிதழ் தேவையில்லை.
அதுபோலவே இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு அன்பு உண்டா என்பதை 1956-ம் ஆண்டில் இருந்து அவர்களுக்காக நான் கொடுத்து வரும் குரலை அறிந்த தமிழர்கள் அறிவார்கள்.
போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று கூறியதுடன், பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் யார் என்பதையும் தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள்.
இனியாவது விடுதலைப் போராளிகள் மீது கடந்த காலத்தில் காட்டிய காழ்ப்பு, விரோதத்தை மறந்துவிட்டு பண்பார்ந்த முறையில் பதிலும் விளக்கமும் அளிக்க ஜெயலலிதா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.